வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 329 வேதியியல் ஆசிரியர்கள்!
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2019 - ஆம் ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பினை 12.06.2019 அன்று வெளியிட்டு, கணினி வழி தேர்வாக செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் நடத்தினர். பின்னர் இத்தேர்விற்கான தேர்வு முடிவினை ஆசிரியர் தேர்வு வாரியமானது அக்டோபர் மாதம் 20 - ஆம் தேதி வெளியிட்டது.பின்னர் சான்றிதல் சரிபார்ப்பானது நவம்பர் மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் முடிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலானது பாடவாரியாக நவம்பர் 20 - ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதில் வேதியியல் தெரிவுப் பட்டியலில் இடஒதுக்கீட்டு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் காரணமாக வேதியியல் பாடம் தவிர்த்து ஏனைய பாடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, 14 பாடங்களை சேர்ந்த சுமார் 1503 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையானது வழங்கப்பட்டது.ஆனால் வழக்குகள் காரணமாக வேதியியல் பாடப்பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 329 முதுகலை ஆசிரியர்களுக்கு எந்தவித கலந்தாய்வும் நடைபெறவில்லை.வேதியியல் பாடத்திற்கான தெரிவு பட்டியலைப் போன்றே தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் பொருளியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வேதியியல் பாட ஆசிரியர்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனைர்.
இதனால் ஒரு சிலர் தொடர்ந்த வழக்குகள் காரணமாக ஏனைய நூற்றுக்கணக்கான ஆசிரியர்களும் அவர்தம் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர். அரசு தேர்வில் வெற்றி பெற்றதால் ஏற்கனவே பணிபுரிந்த பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, வேறு வருமானமின்றி கடும் பொருளாதார சிக்கல்களையும், கடும் மனவேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.அரசு மேலும் தாமதம் செய்யுமாயின் தமிழகத்தில் உள்ள 300 க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வேதியியல் ஆசிரியர்கள் பறாக்குறை ஏற்பட்டு அங்கு பயிலும் +1 மற்றும் +2 மாணவ மாணவிகளின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகும்.
பல ஆண்டுகளாக கடினமாக போட்டித்தேர்விற்கு தயார் செய்து வெற்றி பெற்ற பின்னரும் பணியில் சேர முடியாமல் தவிக்கும் முதுகலை வேதியியல் ஆசிரியர்களின் நலன் கருதியும், அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொண்டு வரும் கல்வியாண்டு தொடக்கத்திலாவது 2019 - ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட முதுகலை வேதியியல் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
- வேதியியல் தேர்வர்கள்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)