Search This Blog

Monday, June 15, 2020

அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

0 comments

சென்னை : அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதே நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், மாணவர் சேர்க்கைக்கான எந்த விதமான பணிகளையும் மேற்கொள்ள கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதன்படி, அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி, தனியார், மெட்ரிக் என அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடர்பாக எந்த ஒரு எழுத்து தேர்வோ, நேர்முக தேர்வோ நடத்தப்பட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் சுற்றறிக்கை மூலம் அனைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment