JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, June 10, 2020

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநர் குழு


தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு தேர்ச்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு தாமதமாவதால் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் 15 முதல் ஜூன் 25-ம் தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் தேர்வைத் தள்ளிவைப்பது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதனை தொடர்ந்து பெற்றோர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து, மாணவர்களின் நலனைக் காக்க 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 12-ம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20% மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

தற்போது தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும், பள்ளிகளை திறந்தால் பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்குமா, இல்லை பாடத்திட்டம் குறைக்கப்படுமா என கேள்விகள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடர்பாக வல்லுநர் குழு தமிழக அரசிடம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பொறுத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment