Sunday, June 7, 2020

பிஹெச்.டி., எம்.பில்., மாணவர்கள் வாய்மொழி தேர்வு முடிக்க ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!


பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு வைவா&வோஸ் எனப்படும் வாய்மொழித் தேர்வை காணொலி மூலம் நடத்த வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பல்கலைக்கழகங்களில் பிஹெச்.டி., எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தி முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு பதிவு செய்திருந்த காலம் ஏற்கனவே முடிந்திருந்தால், அந்த நாளில் இருந்து மேலும் ஓராண்டு காலம் வாய்மொழித்தேர்வை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு வாய்மொழித்தேர்வை காணொலி மூலம் நடத்திட வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை நேரில் அழைக்கக் கூடாது.

மேலும், கரோனா நோய்த்தொற்று அபாயம் உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை அனைத்து பல்கலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக திறக்கக் கூடாது. இவ்வாறு உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment