Monday, June 8, 2020

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசங்கள் வழங்க அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு நுழைவு சீட்டுடன், தலா, மூன்று முக கவசங்கள் வழங்க வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, வரும், 15ல் துவங்குகிறது. இந்நிலையில், திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் முனிசுப்புராயன் வரவேற்றார். இதில், வினாத்தாள் கட்டு காப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர், வெற்றிச்செல்வி பேசியதாவது:திருத்தணி கல்வி மாவட்டத்தில், இதுவரை, 26 மையங்களில் தேர்வு நடந்து வந்தன. தற்போது, கொரோனா தொற்றால், கூடுதலாக, 52 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம், 5,404 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.மாணவர்களுக்கு தேர்வு நுழைவுசீட்டுடன், தலா, மூன்று முக கவசங்கள் வழங்க வேண்டும். தேர்வு அறைகளை கண்காணித்து, சமூக விலகலுடன் தேர்வு எழுத வைக்க வேண்டும்.தேர்வு அறையில், கிருமி நாசினி தெளித்தும், மாணவர்களுக்கு சானிடைர் வழங்கி, காய்ச்சல் உள்ளதா என, கருவி மூலம் சோதிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் அவர்களை, தனியாக தேர்வு மையத்தில் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment