Subscribe Us

Wednesday, September 23, 2020

பணி நிரந்தரம் கோரி போராட்டம் : பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு

'பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யா விட்டால், போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா வெளியிட்ட அறிக்கை:

கடந்த, 2012ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில், 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரம் அடிப்படையில், மாதம், 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, 2014ல், 2,000 ரூபாயும், 2017ல், 700 ரூபாயும் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டது. மிகவும் வறுமை நிலையில் உள்ள பகுதி நேர ஆசிரியர்கள், பல ஆண்டுகளாக, பணி நிரந்தரம் கோரி வருகின்றனர்.

இந்நிலையில், 'தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, வறுமையில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் செய்தபோது, பகுதி நேர ஆசிரியர்களை வைத்துதான், அரசு பள்ளிகள் நடத்தப்பட்டன என்பதை, அமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்.

அமைச்சரின் அறிவிப்பு, பகுதி நேர ஆசிரியர்களை போராட்டத்தில் தள்ளுவதாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடத்தை நிரந்தர இடமாக அறிவித்து, மத்திய அரசு அறிவித்துள்ள தனி நபர் வருமானமான, 18 ஆயிரம் ரூபாயை, கால முறை ஊதியமாக வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed