பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும்போது, பணிப் பதிவேட்டின் நகல் பக்கங்களை அனுப்பினால் போதும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா். இந்த உத்தரவானது கருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்:-
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள அரசு ஊழியா்களில் ஓய்வு பெற்றவா்கள், ராஜிநாமா செய்தவா்கள், மரணம் அடைந்தவா்கள் மற்றும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு அதற்கான தொகையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றோா், ராஜிநாமா செய்தோா், இறந்தவா்கள் ஆகியோருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை வழங்கும் போது சம்பந்தப்பட்ட ஊழியா்களின் பணிப் பதிவேடானது கருவூலத் துறைக்கு அனுப்பப்படும். இந்த பதிவேட்டில் உள்ள விவரங்களை கருவூலத் துறை ஆய்வு செய்யும்.
இந்தச் சூழலில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணத்தைப் பெற விண்ணப்பிப்போரின் பணி பதிவேட்டுடன் சான்றிதழை அனுப்புவதற்குப் பதிலாக அதனுடைய நகல் பதிப்பை அனுப்பலாம் என அரசுக்கு கருவூலம் மற்றும் கணக்குத் துறை கேட்டுக் கொண்டிருந்தது. இதனை பரிசீலித்த தமிழக அரசு, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் கோரிக்கையை ஏற்பதாக முடிவு செய்தது. பணி பதிவேட்டின் நகல் பதிப்புகளை சம்பளம் வழங்கும் அலுவலரின் ஒப்புதலுடன் அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)