தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்தியதால், மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு இந்த ஆண்டுக்கான அனைத்துப் பொதுத் தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் உயர் கல்வி மாணவர் சேர்க்கை குறித்து தமிழநாடு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''கொரோனா காரணமாக இந்த ஆண்டு மாணவர்கள் 11-ஆம் வகுப்பில் எந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்களோ, அதே அடிப்படையில் முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
அதாவது, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாலிடெக்னிக் தொழிநுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கும் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் எடுத்துக்கொள்ளப்படும்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகும்.
சேலம் பெரியார் பல்கலை., மதுரை காமராசர் பல்கலை., அண்ணாமலை பல்கலை. ஆகிய மூன்று பல்கலைக்கழக நியமன முறைகேடுகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும்" என்றார்.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)