Sunday, July 11, 2021

தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – அதிகாரிகள் விளக்கம்!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வுகள் இன்றி அடுத்த வகுப்புகளுக்கு அனுப்பப்பட்டுள்ள

நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு தற்போது மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு வகுப்புகள் சில நாட்களுக்கு முன்னாக ஆன்லைனில் துவங்கியுள்ளது.

ஆனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் தொடங்கவில்லை. இது குறித்து மருத்துவ வல்லுநர்கள், சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசு பள்ளிகளில் பயிலும் தமிழ் வழிக்கல்வி

மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக புதிய வகுப்புகள் முறையான வழிகாட்டுதல்களுடன் தொடங்கியிருந்தாலும், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு எவ்வித வகுப்புகளும் இதுவரை நடத்தப்படவில்லை.

அதற்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மூலம் பயின்று வரும் மாணவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான பாடங்கள் தற்போது காணொளியாக மாற்றப்பட்டு வருகிறது. அதன் படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வீடியோ வடிவமைப்பு தயாரிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கான வீடியோக்கள் விரைவில் தயாரிக்கப்படும். அதன் பின்பாக கல்வி தொலைக்காட்சியில் அம் மாணவர்களுக்கு பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News