Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, October 4, 2022

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் 1,311 பேர் கூண்டோடு நீக்கம்!.


அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 1,311 தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் திடீரென நீக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுதும் செயல்படும், 52 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், பகுதி நேர விரிவுரையாளர்கள் பதவியில், எம்.இ., மற்றும் எம்.எஸ்சி., முடித்த பட்டதாரிகள், 10 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக நியமிக்கப்பட்டனர். 

இந்த வகையில், 2,500 பேர் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தனர்.இவர்களில் முதுநிலை படிப்புடன் ஆராய்ச்சி படிப்பு, பி.எட்., போன்ற கூடுதல் கல்வித் தகுதி உடைய 1,311 பேர் தேர்வு செய்யப்பட்டு, பகுதி நேர பணியில் இருந்து, முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 2019 நவம்பரில், அ.தி.மு.க., ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.

'டிஸ்மிஸ்'இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக இருந்த நிரந்தர பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு நடத்தி, 1,024 பேருக்கு கடந்த வாரம் பணி நியமனம் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த, 1,311 பேர் கூண்டோடு நீக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து, அரசு பாலிடெக்னிக் முதல்வர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையர் லட்சுமிபிரியா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பகுதி நேர மற்றும் தொகுப்பூதிய விரிவுரையாளருக்கு இனி பணி வழங்க வேண்டாம்.'புதிதாக ஆட்கள் தேவைப்பட்டால், யாரையும் நியமிக்கக் கூடாது.

தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும்; இயக்குனரகம் அதை பரிசீலிக்கும்' என, தெரிவித்துள்ளார். போராட்டம் அறிவிப்பு!அரசு பாலிடெக்னிக் முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர் சங்க செயலர் ஜெய்சங்கர் கூறியதாவது:தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால், முறைப்படி கல்வித் தகுதி ஆய்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டோம். 

10 ஆண்டுகளாக நாங்கள் தான் பாடம் நடத்தி வருகிறோம்.எங்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆனால், எந்த காரணமும், முன் அறிவிப்பும் இல்லாமல், 1,311 பேரையும் திடீர் பணி நீக்கம் செய்துள்ளனர். அதனால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறோம்.எனவே, முதல்வரும், உயர் கல்வித் துறை அமைச்சரும், எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். 

பணி நீக்க உத்தரவை உடனே வாபஸ் பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 6ம் தேதி முதல், சென்னையில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment