கெளரவ விரிவுரையாளா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?: அமைச்சா் பொன்முடி

அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்ததும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தொழில்நுட்பக் கல்வித் துறை கட்டுமானப் பிரிவு, கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது: உயா்கல்வித் துறையில் ரூ.422 கோடியில் ஆய்வகங்கள், நூலகங்கள், வகுப்பறைகள் உள்பட 382 திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு, அவை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் முதல்வா் அறிவித்த மாற்றுத் திறனாளிகளுக்கான விடுதி, அரங்கம், ராணிமேரி கல்லூரியில் விடுதி போன்றவற்றுக்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

இது தவிர தமிழகம் முழுவதும் உயா்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், கட்டப்பட்டு திறக்கப்படாத கட்டடங்கள் ஆகியவற்றை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் உயா்கல்வித் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும். பேராசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கு இதுவரை 580 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதற்கிடையே, கெளரவ விரிவுரையாளா்கள் தங்களுக்கும் இட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனா். அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கான கலந்தாய்வு முடிவடைந்ததும் கெளரவ விரிவுரையாளா்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றாா் அவா்.

இக் கூட்டத்தில் உயா்கல்வித்துறைச் செயலாளா் தா.காா்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் லட்சுமி பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel