Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 10, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.03.2023

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: பொறை உடைமை

குறள் : 152
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த லதனினும் நன்று.

பொருள்:
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.

பழமொழி :

Cheerful yesterdays and confident tomorrows.

கடந்தகால மகிழ்ச்சி எதிர்கால நம்பிக்கை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. என் கண் இவ்வுலகை கண்டு கற்றுக் கொள்ள உதவும் ஒரு சன்னல். 

2. எனவே என் சன்னலை பாதுகாப்பேன்.

பொன்மொழி :

உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.நிதானமாக பேசவும் கவனமாக கேட்கவும் வேண்டும்.

பொது அறிவு :

1. மிருகங்களில் குறைந்த நேரம் தூங்குவது எது? 

கழுதை . 

2.நமது உடலின் ஒரு நாள் தாமிரத்தின் தேவை எவ்வளவு? 

25 மில்லி கிராம்.

English words & meanings :

fatuous - silly and pointless. it is a fatuous comment. adjective. மடத்தனமான, அறிவற்ற

ஆரோக்ய வாழ்வு :

துளசி ஒரு குத்துச்செடி. இதில் வெள்ளை துளசி (Tulsi) மற்றும் கருந்துளசி என்ற இரு வகைகள் உண்டு. துளசியில் இருமலை குணப்படுத்தும் யூஜினல் மற்றும் சில வேதி பொருட்கள் உள்ளன. துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்து வந்தால் குளிர்காய்ச்சல் (Fever), கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது.

மார்ச் 10


சாவித்திரிபாய் புலே அவர்களின் நினைவுநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது.

ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து சூத்திரர், ஆதிசூத்திரர் ஆகிய பெண்களுக்குக் கல்வி புகட்டினார். பின்னர் 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். மீண்டும் 1848ஆம் ஆண்டு புனேவில் 9 மாணவிகளுடன் ஒரு பள்ளியைத் துவங்கி அதில் சாவித்திரிபாய் தலைமையாசிரியராகப் பணி செய்தார். சுமார் 6 மாதங்களுக்குப்பின் அப்பள்ளி மூடப்பட்டு வேறோர் இடத்தில் பள்ளி தொடங்கப்பட்டது. பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்று பின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். பல துன்பங்களுக்கு இடையில் கல்விப் பணியாற்றினார்.


நீதிக்கதை

ரகசிய பூஜை

ஒரு சமயம், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயருடைய அவைக்கு, நீண்ட ஜடாமுடி தரித்த, வாட்டசாட்டமான ஒரு சந்நியாசி வந்தார். வரும்போதே அவர், அரசே! விஜயநகருக்குப் பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கிறது. அதைக் கூறி எச்சரிப்பதற்காக, இமயத்திலிருந்து வருகிறேன் என்றார். அதைக் கேட்டதும், அரசர் சற்றுப் பதற்றம் அடைந்துவிட்டார். ஒரு தனியறையில், அரசருடன் ஆலோசனை நடத்தினார் சந்நியாசி.

அரசே! தலைநகருக்கு வெகு தூரத்தில், காட்டில் ஒரு பழமையான பங்களா உள்ளது. அங்கு கெட்ட கிரகங்களைக் களைவதற்காக, ஏழு நாட்களுக்கு ஒரு பூஜை செய்யப்போகிறேன். ஏழாவது நாள் பூஜைக்கு நீங்கள் தனியாக அங்கு வாருங்கள். எல்லாம் நல்லபடியாக முடியும்... என்றார் சந்நியாசி. மறுநாள் முதலே, சந்நியாசியின் பூஜை தொடங்கி விட்டது. ஏழாம் நாள் அரசர் குதிரை மீதேறி அமர்ந்து தனியாக அந்தக் காட்டுப் பங்களாவை நோக்கிச் சென்றார். சந்நியாசி அரசரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அரசரை வரவேற்ற அவர் அரசே! என்னுடைய காரிய சித்தியின் பெருமையைப் பாருங்கள். நான் உச்சரிக்கும் மந்திரத்தின் ஒலி வெகு தூரம் பரவித் திரும்பக் கேட்கும் என்றார். உண்மை என்ன வென்றால், சந்நியாசி, கூறிய ஏதோ ஒரு ரகசிய ஒலி, உரக்கத் திரும்பக் கூறப்பட்டுப் பரவியது. அரசர் திடுக்கிட்டார்... அதே சமயம், முண்டாசு அணிந்த உயரமான ஒரு மனிதன் உள்ளே வந்து, அரசருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டான். அறையில் ஒலித்த சத்தத்தைக் கேட்டு, உரத்த குரலில், அடேய்... இதெல்லாம் ரகசியம், பாதாள ரகசியம்... என்றார். அவர் குரல் நின்றதுமே, மந்திரம் ஒலிப்பதும் நின்று விட்டது. சிலர் விரைந்து ஓடும் ஓசை கேட்டது. 

அரசருக்கு அதிர்ச்சி! சந்நியாசிக்கு வியர்த்து விட்டது. ஆனால், முண்டாசு மனிதர் மட்டும், அமைதியாக இருந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, விஜய நகர வீரர்கள் மூன்று பேரைச் சிறைப்பிடித்து அழைத்து வந்தனர். அவர்கள் சந்நியாசி வேடத்தில் இருந்த எதிரிகளின் ஒற்றர்கள்! வீரர்களைப் பார்த்ததும், சந்நியாசி ஓடினார். ஆனால், அவரும் துரத்திப் பிடிக்கப்பட்டார்.

அப்போது முண்டாசு மனிதர் தனது முண்டாசைக் களைந்தார். அவரைக் கண்டு அரசர் திடுக்கிட்டார்... அருகில் தெனாலிராமன்! செல்லுங்கள் அரசே! விரைவில் இங்கிருந்து போய்விடுவோம். கீழே சுரங்கத்தில் வெடி வைக்கப்பட்டுள்ளது. அதை வெடிக்கச் செய்து இந்தப் பங்களாவைச் சிதறடிக்க வேண்டும் என்பது சந்நியாசியின் திட்டம். மறைந்து கொண்டு மந்திரத்தைச் திரும்பச் சொன்னவன், அவன்தான். எனக்கு ஆரம்பம் முதலே, சந்தேகம் தான். இப்போது பிடிபட்டு விட்டனர்... என்று தெனாலிராமன் சொன்னதும் தான், அரசருக்குத் தனது தவறு புரிந்தது. உண்மைதான் தெனாலிராமா! நீ சரியான நேரத்தில் வந்தாய்... இல்லாவிட்டால், என்ன நடந்திருக்குமோ? நினைக்கவே நடுங்குகிறது... என்று அரசர் தெனாலிராமனை வாரி அணைத்துக் கொண்டார்.

இன்றைய செய்திகள்

10.03. 2023

* உரிய உரிமம் இல்லாமல் அரசு நிலத்தை தொடர்ந்து பயன்படுத்த உரிமையில்லை: சென்னை ஐகோர்ட் .

* கோவை மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக சிகிச்சைக்கு வருவோரில் 10% பேருக்கு ஃப்ளு காய்ச்சல் பாதிப்பு.

* தமிழகத்தில் 6, 7,8-ம் வகுப்பு பயிலும் 4 லட்சம் மாணவர்களுக்கு பல் பரிசோதனை - ‘புன்னகை’ திட்டம் தொடக்கம்.

* தமிழ்நாட்டில் 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி: மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை தகவல்.

* ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை அடுத்து போருக்கு தயாராகும் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல்.

* உக்ரைனின் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிர தாக்குதல்.

* பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டதற்கு  இந்தியாதான் காரணம் - இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி புகழாரம்.

* ஐசிசி தரவரிசை - முதலிடத்தில் நீடிக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

* சென்னையில் இந்தியா- ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி- டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பு வெளியீடு.

Today's Headlines

* No right to continue using government land without a proper license: Chennai High Court

*  10% of outpatients in Coimbatore hospitals have flu.

* Dental check-up for 4 lakh students of 6th, 7th, and 8th standard in Tamil Nadu - 'Punnagai' project started.

* 4 floating docks approved in Tamil Nadu: Central Shipping Department Information

 * INS Vikrant is a battle-ready ship after INS Vikramaditya.

* Russia has launched serious attacks on major cities, including Kyiv, and Ukraine.

 * India's recovery from the economic crisis is the reason - praises Sri Lankan Foreign Minister Ali Sabri.

* ICC Rankings - Ravichandran Ashwin remains at the top.

* India-Australia ODI in Chennai- Ticket sales announcement.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment