5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஒரே வகுப்பறையில் தேர்வு எழுதிய 34 மாணவர்கள் தோல்வி - தேர்வுத்துறை அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 34 மாணவர்கள் கணித பாடத்தில் தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வின் கணித பாட மதிப்பெண் நிறுத்தி வைத்த நிலையில் 34 பேரும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது.

இதற்கிடையில் மார்ச் மாதம் 27ம் தேதி உதகை அருகே உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு மைய கண்காணிப்பாளர் உதவியதாக புகார் எழுந்தது. குற்றச்சாட்டு உறுதியானதால் அறை கண்காணிப்பாளர்கள் உள்பட 5 பேர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அறை கண்காணிப்பாளர்கள் பணிபுரிந்த அறைகளில் தேர்வு எழுதிய 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கோவை, நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் விசாரணை நடத்தினர்.

அச்சமயம், 2 மாணவர்களுக்கு மட்டுமே அறை கண்காணிப்பாளர் உதவியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிகாரிகளிடம் முறையீடு செய்தனர். 2 பேரை தவிர எஞ்சிய மாணவர்களுக்கு உரிய மதிப்பெண் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட கணித பாட தேர்வு முடிவில் 34 மாணவர்கள் தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel