பள்ளிக்கல்வித்துறை வழக்கு - 4 சட்ட ஆலோசகர்கள் நியமனம்

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் 5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நேற்று நடந்தது. மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தை மறு சீரமைப்பு செய்தல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இடையே இணக்கமான சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளை கவனிக்க சட்ட வல்லுநர் நியமிக்கப்பட்டு வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், மேலும் சில சட்ட வல்லுநர்கள் நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.

அதனால் தொகுப்பு ஊதியத்தின் கீழ் 4 சட்ட வல்லுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான ஊதியம் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து வழங்கப்படும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பெற்றோர் போலவும், பெற்றோரும் ஆசிரியர் போல இருக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என்று கூறினார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel