Wednesday, December 27, 2023

இதுவரை பள்ளியே செல்லாதவர்கள், தனித்தேர்வராக 8ம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி?

8ஆ‌ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு (ESLC, Private candidates/ Basic education)

அரசுத் தேர்வுகள் இயக்ககம், குறைந்த பட்சக் கல்வித் தகுதியினை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்வுக்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர்-ஜனவரி மாதம் தனித்தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு நடைபெறும்.

தேர்வு பாடங்கள்: தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்று. ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல். இதில், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழியில் மட்டுமே விடையளிக்க வேண்டும்.

2024ஆம் ஆண்டு 8ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வாக எழுத விரும்புவோர் குறிப்பிட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

2024-ல்‌ நடைபெறவுள்ள தனித்‌ தேர்வர்களுக்கான எட்டாம்‌ வகுப்புப் பொதுத்தேர்விற்கு 01.03.2024 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித்‌ தேர்வர்கள் தகுதியானவர்கள்.

எப்படி விண்ணப்பிபது?

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ இன்று தெரிவித்துள்ளதாவது:

1. ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு

‌தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற தளத்தில்‌ குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு (Service Centre) நேரில்‌ சென்று ஆன்லைன் மூலம்‌ பதிவு செய்து கொள்ளலாம்‌.

2. தேர்வுக்‌ கட்டண விவரம்

விண்ணப்பித்த பின், தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.125/- மற்றும்‌ ஆன்லைன்‌ பதிவுக் கட்டணம்‌ ரூ.70/- என மொத்தம் ரூ.195/-ஐ பணமாக சேவை மையங்களில்‌ நேரடியாகச் செலுத்தலாம்‌.

குறிப்பிட்ட நாட்‌களில்‌ தேர்வு கட்டணத்துடன்‌ தட்கல்‌ விண்ணப்ப கட்டணத் தொகையாக ரூ.500/-ஐ கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்‌.

3. விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

* முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

விண்ணப்பதாரர்கள்‌ ஆன்லைன்‌ விண்ணப்பத்துடன்‌ சான்றிடப்பட்ட தங்களது பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌ / பள்ளி பதிவுத் தாள் நகல்‌ / பிறப்புச்‌ சான்றிதழ்‌ நகல்,‌ இவற்றில்‌ ஏதேனும்‌ ஒன்றினை இணைத்த சமர்ப்பிக்க வேண்டும்‌.

* ஏற்கனவே எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள்‌

ஏற்கனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண்‌ சான்றிதழின்‌/ சான்றிதழ்களின்‌ நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

தனித் தேர்வர்கள்‌ ரூ.42-க்கான அஞ்சல்‌ வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்றினை விண்ணப்பத்துடன்‌ இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்‌.

4. ஆன்லைன்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்‌. தபால்‌ மூலம்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌.

5. தேர்விற்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ காணலாம்‌.

அடுத்த இத்தேர்வுக்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2024 ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment