EMIS - பதிவை மேற்கொள்ள ஆசிரியர் கூட்டணி மறுப்பு

'டிட்டோ ஜாக் முடிவின்படி 'எமிஸ்' பதிவுகளை மேற்கொள்ள மாட்டோம்' என, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் எனப்படும், 'எமிஸ்' பதிவுகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என, சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலர் முத்துபாண்டியன் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருகை பதிவு, விலையில்லா பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், எமிஸ் வழியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இவற்றையும் ஆசிரியர்களே மேற்கொள்வதால் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளில் இருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக், போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

கடந்த அக்., 12 அன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த பேச்சில், நவம்பர் முதல் எமிஸ் பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், அதற்கான ஆணை விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை ஆணை எதுவும் வெளிவரவில்லை. எமிஸ் பதிவுகளை மேற்கொள்ள அதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர்.

எனவே, டிட்டோ ஜாக் முடிவின்படி, இனி எமிஸ் பதிவுகளை மேற்கொள்ளப் போவதில்லை என, முடிவு செய்துள்ளோம்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel