தமிழகத்தில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் மே 6-ம் தேதி வெளியாகிறது. ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளுக்கு 2 நாட்கள் முன்பு BE, BTech-க்கான விண்ணப்பப் பதிவை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
விரைவில் விண்ணப்பப் பதிவு, கலந்தாய்வு உள்ளிட்ட தேதிகள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. 2024 - 2025-ம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகியவற்றை நடத்துவது குறித்த கூட்டம், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் ப்ளஸ் டூ வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும் என அரசுத் தேர்வுத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு, ப்ளஸ் டூ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் மே 6-ம் தேதியில் இருந்தோ அல்லது ஒரு வாரம் முன்பாகவோ தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்களுக்கு ஒரு மாதம் வரை ஆன்லைன் வழியில் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வை, மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பொறியியல் படிப்பில் நடப்பாண்டில் புதிய படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.










No comments:
Post a Comment