Subscribe Us

Thursday, April 3, 2025

உள்ளூர் மொழிகளில் பாடநூல்கள் மொழிபெயர்ப்பு: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடநூல்களை உருவாக்குவதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: பாரதிய பாஷா புஸ்தக் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் எண்ணிம வழியிலான (மின் நூல்கள்) புத்தகங்களை வழங்குவதற்கான ஒரு புதிய முன்னெடுப்பாகும். கல்வி கற்பதை மேலும் எளிதாக அணுகக் கூடியதாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடங்களை ஆங்கிலம் மற்றும் 22 இந்திய மொழிகளில் நேரடியாக எழுதவும், ஏற்கெனவே ஆங்கிலத்தில் உள்ள பாடப் புத்தகங்களை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை இணையதளத்தில் மின் நூல்களாக பதிவேற்றம் செய்யப்பட்டு பிராந்திய மொழிகளில் தொழில்நுட்பக்கல்வி நூல்கள், பாடப்பொருள் சார்ந்த கற்றல் வளங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் பாடநூல்கள் உருவாக்கப் பணிகள் மற்றும் பாடப்பொருள் தயாரித்தலில் பங்கெடுக்க விரும்பும் அனைத்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் இது தொடர்பான தங்களது விருப்பத்தை ஏஐசிடிஇ தளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Popular Feed