Search This Blog

Tuesday, November 25, 2025

ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறையுமா சமூக வலைதளங்களில் அரசுக்கு அழுத்தம்

0 comments
ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை மற்ற மாநிலங்களில் உள்ளது போல குறைக்க வேண்டும்,' என, தேர்வர்கள், சமூக வலைதளங்கள் வாயிலாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில், என்.சி.இ.டி. விதிமுறைப்படி ஆசிரியராக பணிபுரிய, அவர் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த, 15, 16ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது. மத்திய தகுதி தேர்வை பொருத்தவரை ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. தமிழகத்தில், மூன்றாண்டுக்கு ஒரு தேர்வு நடத்தப்டுகிறது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதனால், பணியில் உள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற இயலாத நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் நவ. மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்.டி. பிரிவுக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண், 60 என குறைத்து வழங்கியுள்ளனர். இது மற்ற பிரிவினரிடையே அதிர்ச்சி மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற மாநிலங்களை போல, அனைத்து பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களை போன்று மதிப்பெண், 75 ஆக குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் 'டிரெண்டிங்' செய்து அரசின் கவனத்தை ஈர்க்க தேர்வர்கள் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில், ஆசிரியர் பணி பெற இருவகை தேர்வுகள் எழுத வேண்டும். ஆசிரியர்கள் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவுடன், மீண்டும் ஒரு போட்டி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அரசு பணி தமிழகத்தில் வழங்கப்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, முதலாவதாக எழுதப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போன்று, மதிப்பெண்ணை 75 ஆக குறைக்க வேண்டும், என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment