Search This Blog

Wednesday, September 2, 2026

யுனெஸ்கோ உடன் கைகோர்த்த சென்னை ஐ.ஐ.டி; அடுத்த தலைமுறை ஏ.ஐ உருவாக்க திட்டம்

0 comments
இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) சென்னை மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ - UNESCO) மகாத்மா காந்தி அமைதி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கல்வி நிறுவனம் (MGIEP) ஆகியவை அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆழ்நிலை கற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான முயற்சியை எடுத்துள்ளன.

இந்த ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் ஒப்பந்தம், யுனெஸ்கோ எம்.ஜி.ஐ.இ.பி-யின் இயக்குநர் ஒபிஜியோஃபர் அகினம், ஐ.ஐ.டி சென்னையின் டீன் (தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி) மனு சந்தானம், மற்றும் ஐ.ஐ.டி சென்னையின் அனுபவ தொழில்நுட்ப புத்தாக்க மையத்தின் (XTIC) தலைவர் எம். மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் சமீபத்தில் கையெழுத்தானது.

டிஜிட்டல் கற்றல் தீர்வுகளை இணைப்பதன் மூலம் கல்வித் துறையை மாற்றுவதற்கான இந்த முயற்சிக்கு, சமூக மற்றும் உணர்ச்சிசார் கற்றலில் (SEL) யுனெஸ்கோ எம்.ஜி.ஐ.இ.பி-யின் தலைமைத்துவமும், செயற்கை நுண்ணறிவு, விரிவாக்கப்பட்ட யதார்த்தம் (XR), விளையாட்டு வடிவமைப்பு மற்றும் ஆழ்நிலை தொழில்நுட்பங்களில் ஐ.ஐ.டி சென்னையின் நிபுணத்துவமும் ஆதரவளிக்கும்.

யுனெஸ்கோ எம்.ஜி.ஐ.இ.பி-யின் இயக்குநர் ஒபிஜியோஃபர் அகினம், தங்களது அமைப்பு எஸ்.இ.எல் நிபுணத்துவத்தையும், செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகள் மற்றும் கற்பவர் மையக் கல்வி குறித்த யுனெஸ்கோவின் பரிந்துரைகளுடனான இணக்கத்தையும் கொண்டு இத்திட்டத்திற்குப் பங்களிக்கும் என்று கூறினார்.

உருவாக்கப்பட்ட திறந்த மூல செயற்கை நுண்ணறிவு, அன்றாட வகுப்பறை நடைமுறையில் சமூக உணர்ச்சிசார் கற்றலை (SEL) ஒருங்கிணைக்கும் அளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தக் கருவி, பாடத்திட்டங்கள், கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் மதிப்பீடுகளில் எஸ்.இ.எல்-ஐ நடைமுறையில் பயன்படுத்த உதவும் ஒரு தற்காலிக தளத்தை வழங்குவதன் மூலம், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும் உதவும் என்று ஒபிஜியோஃபர் அகினம் கூறினார்.

இதன் விளைவாக உருவாகும் ஓபன் ஏ.ஐ (OpenAI) மாதிரிகள், குறைந்த அலைவரிசை சூழல்களிலும் குறைந்த செலவிலும் திறமையாகவும் இருக்கும் என்றும், தொடர்ச்சியான இணைய இணைப்பைச் சார்ந்திருக்கும் நிலையை நீக்கும் என்றும் ஒபிஜியோஃபர் அகினம் கூறினார்.

செய்தி வெளியீட்டின்படி, இந்த ஒத்துழைப்பு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கல்வி முறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கக்கூடிய, விரிவாக்கத்தக்க டிஜிட்டல் கற்றல் தொழில்நுட்பங்களையும் உருவாக்கும். இந்த உருவாக்கம், அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான சமூகங்களுக்கான கல்வியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு (SDG) 4.7-க்கு இணங்க இருக்கும்.

தொழில்நுட்பக் கருவிகளின் உருவாக்கத்துடன் கூடுதலாக, இந்தக் கூட்டு முயற்சியானது கல்வித் தொழில்நுட்பம், கற்பித்தல் முறைமை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கற்றல் அறிவியல் ஆகிய துறைகளில் கூட்டு ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளையும் ஆராயும். மேலும், இது ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், பயிலரங்குகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளுக்கான தளத்தை அமைப்பதோடு, ஆழ்நிலைத் தொழில்நுட்பங்கள் (immersive technologies), கற்பித்தல் முறைமை மற்றும் கற்றல் அறிவியல் ஆகியன சங்கமிக்கும் துறைகளில் பல்துறை சார்ந்த ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும்.

No comments:

Post a Comment